Monday, June 21, 2021

காவு வாங்குகிறதா, குமரி மாவட்டம் கருங்கல் பகுதி வேளாங்கோடு செம்மண் குளம்! தொடரும் வாகன பலிகளால் மக்கள் கடும் அச்சம். குளத்திற்கு உறுதியான தடுப்பு சுவர் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செல்லங்கோணம் செல்லும் சாலையில் வேளாங்கோடு என்னும் செம்மண் குளம் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 21-06௨021 குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (50 வயது) ரப்பர் விவசாயி, தனது மூத்த மகள் ஷாமினி (வயது 21), இலைய மகள் ஷாலினி (வயது 20) ஆகியோருடன், ஈத்தாமொழி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லும் வழியில், கருங்கல் நண்பரை சந்தித்து விட்டு, பேருந்துகள் ஓடும்  செல்லங்கோணம் செல்லும் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் வாகனம் செம்மண் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இளைய மகள் ஷாலினி வாகன கதவை திறந்து நீந்தி உயிர் தப்பினார். போதிய வெளிச்சமும் இல்லாததால், தந்தையையும், சகோதரியையும் காப்பாற்ற இயலாத சூழலில், தந்தையும், சகோதரியும் காருடனே நீரில் மூழ்கி ஷாலினி கண் முன்னே பரிதாபமாக இறந்தனர். இது அந்த வட்டார மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இந்த கோர விபத்தானது, குளத்தை ஒட்டி சாலை அமைந்ததாலும், சாலை சரியில்லாததாலும், குளத்திற்கும் சாலைக்கும் இடையில் தடுப்பு சுவர் இல்லாததாலும், சாலை வெளிச்சம் இல்லாததாலும் நடந்திருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இதே குளத்தில், இதே போல கடந்த நாட்களிலும், 15 க்கும் மேற்பட்ட வாகன விபத்துக்களால் பலர் இறந்துள்ளனர். இதனால் உறுதியான தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் சார்பாக பலமுறை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தும் முந்தைய தமிழ்நாடு அரசு செவிசாய்க்காமலே இருந்திருக்கிறது என்பது குமரி மாவட்ட மக்களின் துர்பாக்கிய நிலையாக இருக்கிறது.

இந்த செம்மண் குளத்தை போல, செல்லங்கோணம் கடையகுளம், கப்பியறை குளம், மேக்கோடு குளம், பெத்தேல்புரம் குளம், வேம்பனூர் குளம்ம் புத்தேரி குளம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சுங்கான்கடை குளம், போன்ற 100 க்கும் மேற்பட்ட குளங்கள் குமரி மாவட்டத்தில் மக்கள் பயணம் செய்யம் பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளன. இவை யாவற்றிற்கும், தடுப்பு சுவரோ, தரமான சாலையோ, இரவு நேரங்களில் போதிய வெளிச்சமோ இல்லை. சாலையை விட குளம் தாழ்வாக இருப்பதாலே விபத்துக்கள் தொடர்கிறது என்பது அவலத்திற்குரிய செய்தியாகும்.

சாயங்கால நேரம் முதல், அதிகாலை நேரம் வரை சாலை விளக்குகள் இல்லாமலும், விளக்குகள் இருந்தும் பராமரிப்பு இல்லாததால் வெளிச்சம் இல்லாததாலும், குளங்களை ஒட்டிய சாலைகளுக்கு தடுப்பு சுவர் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்ட முடியாமல் தினமும் அவதிக்குள்ளாகின்றனர் என்ற செய்தி தினசரி நாளேடுகளில் குமரி மாவச்ச செய்தி பக்களில் தினமும் வருவதை காணலாம்.

இப்படிபட்ட விபத்துக்கள் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகளின் குடும்பங்கள், தங்களின் வருமானம் ஈட்டும் தந்தையையோ, மகனையோ அல்லது குடும்பமாக செல்லும்போது, மொத்த குடும்ப உறுப்பினர்களையோ இழக்கும் நிலையால், பல குடும்பங்கள் அனாதைகளாக வாழும் அவலம் குமரி மாவட்டத்தில் தொடர்கதையாகி வருகிறது.

இது போன்ற அவல நிலயை தடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை உயரமான தடுப்பு சுவர் அமைத்து தராமாலே முந்தைய அரசுகள் தட்டி கழித்தன. 
ஆகவே தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, குமரி மாவட்டத்தின் பேருந்துகள் ஒடும் பிரதான சாலையை ஒட்டியுள்ள அனைத்து குளங்களிலும் சாலையை விட, 6 அடிக்கு மேலான உயரமான, உறுதியான  தடுப்பு சுவர் அமைத்து இது போன்ற வாகன விபத்துகளை தடுத்து குமரி மாவட்ட குடும்பங்கள் அனாதைகளாகும் அவல நிலையிலிருந்து காக்குமாறு குமரி மாவட்ட பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். 

மைக்கேல் செல்வ குமார்
குமரி மாவட்டம்
21-06-2021

No comments:

Post a Comment