Tuesday, July 21, 2015

3 தமிழர்களுக்கு கருணை காட்ட கூடாது என வாதிட்ட மத்திய அரசுக்கு கண்டனம்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல்  சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனு எந்த அடிப்படையில் விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்  ரஞ்சித் குமார், சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டக் கூடாது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சாந்தன், முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

நிரபராதிகளை உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டு விடுதலை வழங்கிய பிறகும், மத்திய அரசு விடுவிக்காமல், கருணைகாட்ட கூடாது என கூறியிருப்பது மனித நேயமற்ற செயலாகும். இதனால் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு, 3 தமிழர்களுடன், மொத்தமாக 7 தமிழர்களையும் மத்திய அரசு விடுவிக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment