Monday, February 15, 2016

தங்கமான ஈஸ்வரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பல்லாங்குழி விளையாட்டிலிருந்து, கோலி, பம்பரம், தட்டுபிள்ளை, சிங்காம் பிள்ளை, கிரிக்கெட், கபடி, சீட்டு இது போன்ற அனைத்து விளையாட்டுக்களையும் விளையாடிய ஞாபகம்தான் வருகிறது என்றாலும், நொங்கு வெட்டி சாப்பிட்டதையும், ஊர் சுற்றியதையும் மறக்க முடியாமல் என் இதயம் துடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

முகநூலில் வா என்று பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வளவு நாள் என் கண்ணில் தென்படாத உன் முகநூல் கணக்கு, உனது பிறந்த நாளிலே உனது அழைப்பாக வந்தது.

பார்த்ததுமே மகிழ்ச்சி தாண்டவம்தான். அதுவும் உனது பிறந்தநாளில் வந்தது அதை விட எல்லையில்லா மகிழ்ச்சி.

வயதில் மூத்த அண்ணனாக இருந்தாலும், நாங்கள் சிறு வயதிலே கைகோர்த்து வயல் வழியில் நடந்து திரிந்த காலத்திலே நட்பு கலந்த உணர்வால் பெயரை சொல்லி அழைக்கவே தொடங்கியிருக்கிறேன் என் கால்சட்டை பருவத்திலிருந்தே. வயதில் மூத்தவனை இப்படி அழைக்கிறானே என சிலர் கேட்டதுமுண்டு. ஆனாலும் என் நண்பனான அண்ணன் இதுவரை ஏதும் சொன்னதில்லை. இப்போதும் அப்படியே பழகுகிறோம் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல்.

வருடங்கள் கடந்தாலும் தொலை தூரத்தில் இருக்க அந்த உள்ளூரமான நட்பு மட்டும் இன்னும் ஈரமாகவே இருக்கிறது. நேற்றிரவு முகநூலை திறந்த போதுதான் உன் முகநூல் அழைப்பு. உடனே அழைக்க எண்ணினேன். ஆனால் இந்திய மணி 11.45. காலையில் அழைக்கலாம் என்றிருந்தேன். என் பணி சுமை என்னை அனுமதிக்கவில்லை. உணவு இடவெளியின் போதே என் உணர்வை எழுத்துக்களால் வடிக்க முடிகிறது.

எங்கள் நட்பு இப்படியே தொலை தூரத்தில் எவ்வளவு நாள்தான் கடக்குமோ என்ற ஏக்கம்தான் என்னை வாட்டுகிறது. வறுமை தீராதா, ஊரோடு வாழ முடியாதா என்ற ஏக்கமும்தான் இன்னும் மேலோங்கி நிற்கிறது.

வயல்வழிகளில் நண்பனோடு கதை பேசி நடக்க முடியாதா, நொங்கு வெட்டி சண்டை போட்டு உண்ண முடியாதா, கிணத்தடியில் நள்ளிரவு வரை பேச முடியாதா, மிதி வண்டியில் பல மைல் செல்ல முடியாதா, வீட்டிற்கு தெரியாமல் தொலை தூரம் பயணிக்க முடியாதா என்ற எண்ணமெல்லாம் உன் ஒரு முகநூல் அழைப்பிலே நிகழ்ந்துவிட்டது.

நண்பனே வாயிலிருந்து வார்த்தைகளால் சொல்லமுடியாதவற்றை என் இதயித்தினூடாக என் கை விரல்கள் கவிதை பாடி விட்டன. உடல் தூரமாக இருந்தாலும், அந்த நட்புகள் உள்ளூர இதயத்திலே எப்போதுமே இருக்கிறது என்பதற்கு நீயும் சன்றாகும்.

நட்பை எவராலும் பிரிக்க முடியாது. நட்பிற்கோ எல்லை கிடையாது. கடல் தாண்டினாலும் கருணையோடு அளவளாவும் அன்பு மட்டும் அப்படியே அசையாமல் ஆட்கொள்கிறது.

வரும் காலம் எபோது நட்பு பாராட்டலாம் என்ற ஒரு எண்ண ஓட்டதிலே நண்பன், சந்தோசமாக நலமோடு வாழ நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
மைக்கேல் செல்வ குமார்.

No comments:

Post a Comment