Monday, October 19, 2015

தமிழீழத்தை சுவாசிக்கும் சோமுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

கொங்கு மண்டலத்தில் தமிழீழத்தை தாங்கிய பெயரை தனது விருப்பமாக கொண்டதால், தமிழீழத்தி மேலுள்ள தீராத பற்றால், தமிழீழ சோமு என்று தனது பெயரை பயன்படுத்தினார். அனைவரும் தமிழீழ என்ற அடைமொழியோடே தமிழீழ சோமு என அழைத்தனர். 


நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர் சோமு, அன்பு பாராட்டுவதில் பகவானையும் மிஞ்சியவர். மிக சிறந்த பண்பாளர், ஊரறிந்த உத்தமர். என் அன்பிற்கினிய இளவல். அவர் வாழ்வில் பல ஏற்றங்களை பெற்று மகிழ்ச்சியோடு தழைக்க என் மனம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Sunday, October 18, 2015

தமிழீழ உணர்வாளன் தம்பி தீபனுக்கு பிறந்த தின வாழ்த்து!

திலீபன் அழைப்பது சாவையா! இந்த சின்ன வயசில் இது தேவையா என உணர்ச்சி பொங்க பாடினாரே தமிழீழத்து உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், திலீபனுக்காக அந்த கவிதை வரிகளை பெற்று தந்தாரே 1987 ஆம் வருடம் அதன் நினவால் வாடும்போதே அதற்கு அடுத்த வருடம் 1988 ஆம் வருடம் செப்டம்பரை அடுத்த அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளில்தான் தீபன் பிறந்தார். 

தமிழீழ மக்களின் விடியலுக்காக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா நிலையிலே உயிரை மாய்த்தானே அதே உணர்வால்தான் இந்த தம்பிக்கு தீபன் என்றும் அவருடைய சகோதரருக்கு திலீபன் பெயர் சூட்டபட்டுவிட்டது. 

ஒரு திலீபன் காவியமானான். இரண்டு திலீபன்கள் உருவெடுத்தார்கள். தமிழீழ கொள்கையை தன் வாழ்நாளெல்லாம் தாங்கி பிடித்திருக்கின்ற கொள்கை தலைவன் ஈரெழுத்து மந்திரம் வைகோ என்னும் காவலனை தமிழீழ லட்சியத்திற்காக கரம் பிடித்தார்கள்.

தம்பி தீபன் தமிழ் மீதும், தமிழீழம் மீதும் பிறப்பாலே பற்றுக்கொண்டவர். அதை தனது கொள்கையாகவே கடைபிடிப்பவர். அவர் கண் முன்னே நிழலாடும், வரலாற்று சுவடுகளை அவ்வப்போது நமது முகத்திரையிலும் வெளிச்சம் போட்டு காட்டி நினைவூட்டுபவர். 

மறுமலர்ச்சி திமு கழகத்தின் இணையதள வித்தகர், உடுமலைபேட்டை மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர், ஈடிணையில்லா நட்பிற்கு நாணயமானவர். அவர் வாழ்வாங்கு வாழ எனது இதயத்தின் கதவுகளை முழுவதுமாக திறந்து பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Saturday, October 17, 2015

கருணைக்கு வாழ்த்து!

நாமக்கல்லின் நவரத்தினமே!
மயிலாடுதுறை தந்த மாணிக்கமே!
சிரிப்பிற்கு சிகரம் தந்த சினேகிதனே!
நட்பிற்கு பெருமை சேர்த்த பெருந்தகையே!
ஊராருக்கு ஊன்றுகோலாகின்ற உன்னதரே!
தாய்லாந்து தாலாட்டுகிற பவள முத்தே!
கடல் தாண்டி பயணிக்கு கழக ஓடமே!
இந்நாள் முடிய உம் இமை மூடும் தருணம்!
இரவிலே நான் வாழ்த்த, அது மறவா வாழ்த்தாக!
இரவு வணக்கத்தோடு நட்பின் நயத்தோடு நீர் வாழ்க!

நட்புடன், 
மறுமலர்ச்சி மைக்கேல்

Thursday, August 13, 2015

கன்னியாகுமரி மாவட்டத்தில் கம்பியில்லா இணைய வசதி-பொன். ராதாகிருஸ்ணன் அவர்களுக்கு மறுமலர்ச்சி மைக்கேல் பாராட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பிஎஸ்என்எல் சார்பில் கம்பியில்லா இணைய (wifi) வசதி செய்யப்படவுள்ளது. மேலும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா, காந்தி மண்டபம், நாகர்கோவில் பேருந்து நிலையம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்ளில் விரைவில் கம்பியில்லா இணைய வசதி (wifi) வசதி செய்யப்படும் எனவும் தற்போதைய தொழில்நுட்பத்துடன் கூடிய தொலை தொடர்பு இயந்திரங்களை மாவட்டத்தில் உடனடியாக பொருத்தி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளது.

மேலும் குளச்சல், கன்னியாகுமரி, குலசேகரம், குழித்துறை, நாகர்கோவில், தக்கலை ஆகிய பி.எஸ்.என்.எல் எக்சேஞ்களில் பழைய உபகரணங்களை மாற்றி புதிய தலைமுறைகளுக்கான (3g, 4g) உபகரணங்களை பொருத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்படும்.

இத்தகைய நற்பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கும் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இத்தகைய மக்கள் பயன்பெறும் பணிகளை வேகமாக செய்ய BSNL நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டுவருவதால் குமரி மக்கள் விலையில்லா இணையதள வசதியை பெற்று தொடர்புகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்.

Saturday, August 1, 2015

காந்தியவாதி சசிபெருமாள் உயிரிளப்புக்கு கண்ணீர் அஞ்சலி – இறப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கடும் கண்டனம்!

குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் உள்ள மதுக்கடை தேவாலயங்கள், கோவிலகள் மற்றும் பள்ளிகூடங்களுக்கு அருகில் அமைந்திருக்கிறது. இதை அகற்ற கோரி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தியிருக்கின்றனர் ஊர் பொதுமக்கள். ஆனால் அகற்றபடாமலே இருந்தன. இதனால் ஒரு மாதத்திற்கு முன்னரும் மதுக்கடைகயை அகற்ற காந்தியவாதி சசிபெருமாள் முன்னிலையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ஒரு மாதத்திற்கும் மதுக்கடையை மாற்றிவிடுவோம் என காவல்துறையினர் வாக்கு கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுக்கடை அகற்றபடாமல் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகவே இருந்து வந்தது.

ஒரு மாதகால அவகாசம் கொடுத்தும் மதுக்கடையை அகற்றாத அரசை கண்டித்து, காந்தியவாதி சசிபெருமாள் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சசிபெருமாள் மிரட்டல் விடும் விதமாக அலைபேசி கோபுரத்தில் ஏறினார். மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடினார். இந்த மதுவிலக்கு போராட்டத்தில் நாலு மணி நேரமாக அலைபேசி கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனாலும் தமிழக காவல்துறை காந்தியவாதி சசிபெருமாளை கீழே இறங்க நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை என்ற பெயரில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. நடு வெயிலில் நான்கு மணி நேரத்திற்கு மேல் 200 அடி உயரத்திற்கும் மேலுள்ள அலைபேசி கோபுரத்தில் போராடியதால் சிறு களைப்பாக இருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் கடைசியில் அவரை கீழே இறக்க முயன்று, அவரது உடலில் கயிறு கட்டி, வயிறு பகுதி நெஞ்சு பகுதிகளில் சுற்றி கீழே இறக்கியுள்ளனர். கீழிறக்கும்போது மயக்க நிலையிலே இருந்துள்ளார் சசிபெருமாள். அதனால் பொதுமக்களை அவரின் பக்கத்திலே காவல்துறை அனுமதிக்கவில்லை. உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். பின்னர் சற்று நேரம் கழித்து சசிபெருமாள் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இது தமிழக மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சசிபெருமாள் சோர்வாக இருந்ததாலும், மேலும் அவரை கயிறு மூலம் கட்டி இறக்கியதால், கயிறு இறுகியதினாலும் அவர் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர்மேலும் அவரின் உடலில் ரத்தம் இருந்ததாலும், அந்த ரத்தம் அவரின் மேலாடை முழுதும் பரவியதாலும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சசிபெருமாள் அவர்கள் அலைபேசி கோபுரத்தில் ஏறியவுடனே, கடமைக்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் சசிபெருமாளை கீழிறக்காமல் நின்றுள்ளனர் காவல்துறையினர். முதலிலே போலீசார் அவரை கீழ் இறக்கியிருந்தால் அவர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டிருப்பார். காவல்துறை அராஜக போக்கை கடைபிடித்து அவரின் உயிரை காப்பாற்ற தவறியிருக்கிறது. மேலும் அவரின் உடலில் எவ்வாறு இவ்வளவு ரத்தம் வந்தது என்பதை காவல்துறையும் தமிழக அரசும் மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.

இறந்த சசிபெருமாள் அவர்களின் உடல் ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலே வைக்கப்பட்டிருக்கிறது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் நேற்று மாலை பார்வையிட்டு போஸ்ட்மார்ட்டம் நடைபெற இருந்ததை தடுத்து நிறுத்தி, சசிபெருமாள் மகன் வந்த பின்னர் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

சசிபெருமாள் மகன் மற்றும் குடும்பத்தினர் சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தனர். தமிழக அரசு மதுகடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கும் வரை சசிபெருமாள் அவர்களின் உடலை பெற்றுகொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்துவிட்டனர். இதற்கு குமரி மாவட்ட மக்கள் அனைவருமே முழு ஆதரவு தந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே தமிழக அரசானது மதுவிலக்கிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிற காந்தியவாதி சசிபெருமாளின் உயிரை காக்க தவறிய தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சசிபெருமாள் அவர்களின் இறப்பின் மர்மத்தை விளக்க, பணியில் இருக்கும் நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தி, குற்றங்களை கண்டுபிடிக்கவேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மதுவிலக்கிறகாக போராடிய சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்கு போராட்டக்களத்திலே உயிரைவிட்டார். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். மேலும் அன்னாரது ஆன்மா இறவனுடைய திருவருளில் சேரவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Monday, July 27, 2015

அன்னை தமிழகத்தை அலை திரளாக அகிலமெங்கிலும் பரப்பிய அணுவை துளையிட்ட அப்துல் கலாமிற்கு கண்ணீரில் எழுதிய இரங்கற்பா!

இந்தியரை உலக உச்சாணியில் ஏற்றி வைத்து, இப்போது ஏங்க வைத்த ஏவுகணை நாயகனே உலக மக்களின் கன்ணீரிற்கு நாயகனாகிவிட்டீரே!

பட்டித்தொட்டியில் பிறந்து பாமரனாய் வீட்டில் வளர்ந்து பாகுபாடின்றி பகுத்துணர்ந்து பல கண்டங்களை கண்டதனால்தான் காவியமானீரோ?

கனவு காணுங்கள் என்று சொல்லி கொடுத்த மேதை இப்போது மேகங்களில் மறைந்து விட்டார். அவர் சொன்ன அந்த கனவிலாவது அவரை காணுவோமோ?

2020 என்று சொல்லி வல்லரசாவதற்கு முன்னரே இந்த வல்லாதிக்க ஆட்சியை கண்டு மனம் பொறுக்காமால் நீவிர் மெளனித்தது ஏனோ?

உமது திட்டங்களை இந்தியம் நிறைவேற்றுமா என்று ஏக்கத்துடனே எங்களை ஏங்க வைத்துவிட்டு ஏகலவனிடம் ஏணி படியேறி சென்றது ஏனோ?

சிறு பிள்ளை முதல் படுக்கை பாட்டி வரை உமது பெயரை உச்சரிக்க வைத்துவிட்டு, எங்கள் நாவிற்கு ஓய்வு கொடுக்க நீர் ஓய்வெடுத்தீரோ?

அன்பிற்கு இலக்கணமாய், அகிலத்தையும் ஆட்கொண்டு, எங்கள் இதயத்தை ஆக்கிரமித்து, அநாதையாய் எங்களை ஆர்ப்பரிக்க விட்டதேனோ?

அணுவை கொண்டு ஏழு கடலை தாண்டி ஏவுகணை செதுக்கிய நீவிர் சிலாங்கிலே சினம் கொண்டு ஏவுகணைகளை ஏங்க வைத்தது ஏனோ?

குழந்தைகளிடத்தில் இறைவனை கண்டு அவர்களை ஊக்கப்படுத்திய உன்னதமான நீவிர், அக்குழந்தைகளுக்காக இன்னொரு முறை வருவீரோ?

வல்லாதிக்க நாடுகளை கொலைநடுங்க வைத்து போக்ரான்-II மூலம் மூலை முடுக்கெல்லாம் செலுத்தமுடியும் எந்று நீவே ஏவுகணையானீரோ?

உலகமே உமை கண்டு வியக்கும்படி நீவிர் உருவாக்கிய உம்மை, உலக மக்களையெல்லாம் உறங்காமல் உளர வைத்ததேனோ?

அணுவை செதுக்கி சிறை பிடித்து, சிற்பமாக்கி, சீனாவை சினங்கொள்ள வைத்தவரே, எங்கள் சிந்தனைகளை சிதறவைத்ததேனோ?

மாணவர்கள் மல்லாந்து படுக்க, கனவுகளை கண்ணயராமல் காண, கற்று கொடுத்த கோமானே, எங்களை கையொடிந்த பறவைகளாக்கியதேனோ?

கற்று தந்த பாடங்கள் கலாம் பெயரை சொல்லும் போது காலம் காலமாய் கையெடுத்து கும்பிட என்னை கவிஞராய் உமக்கு கவிபாட வைத்தீரோ?

அகிலமே உம்மை போற்ற, எங்களை பொற்குவியலில் அடைத்து விட்டு, வெண்குகையில் நீவிர் தஞ்சமடைந்து தவிப்பதற்கு என்ன காரணமோ?

உலகமே உற்றுப்பார்த்த உன்னதர் உம்மை அணுவின் பெயரால் அகிலமே போற்ற ஆறடி ஆழத்தில் அமைதியாய் ஒய்வெடுக்க ஆயத்தமானீரோ?

கடல் பரந்த தேசமெங்கும் உமது கொள்கை பரவட்டும், இந்தியாவின் இறைமையை போற்றட்டும், தமிழராய் எங்களை தலை நிமிர செய்யட்டும்,

தமிழால், தமிழரால், தமிழுக்காக உமது புகழ் பெருகட்டும். உலகமே உமது நாமத்தை போற்றட்டும். புகழ்பெற்ற உம் ஆன்மா இறவன் புகழில் சேரட்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்

Tuesday, July 21, 2015

3 தமிழர்களுக்கு கருணை காட்ட கூடாது என வாதிட்ட மத்திய அரசுக்கு கண்டனம்!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற அரசியல்  சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு, இந்த மனு எந்த அடிப்படையில் விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர்  ரஞ்சித் குமார், சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். ராஜிவ் கொலை குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டக் கூடாது என்றும் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சாந்தன், முருகன் தரப்பு வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 24 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, அவர்களை விடுவிப்பது குறித்து தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

நிரபராதிகளை உச்சநீதிமன்றமே கடந்த ஆண்டு விடுதலை வழங்கிய பிறகும், மத்திய அரசு விடுவிக்காமல், கருணைகாட்ட கூடாது என கூறியிருப்பது மனித நேயமற்ற செயலாகும். இதனால் மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதோடு, 3 தமிழர்களுடன், மொத்தமாக 7 தமிழர்களையும் மத்திய அரசு விடுவிக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்