Saturday, November 7, 2015

தமிழ் மக்களுக்காக போராடும் வைகோவின் வீரத்தாய்க்கு கண்ணீர் அஞ்சலி!

மாரி போல வாரி இறைத்து வந்தவருக்கெல்லாம் வயிறாற்றி பாதுகாத்த அன்னை மாரியம்மாள். பார் போற்றும் வீர திருமகன் வைகோவை பத்து மாதம் பாதுகாத்து பெற்றெடுத்த குலமகள். 

ஆசிவாங்க வருபருக்கெல்லாம் தமிழ் பண்பாடு மாறா போற்றுதல். எறும்புகளுக்கும் ஊறு விளைவிக்காமல் உணவிட்ட கருணை தாய்.


தமிழீழத்தை நேசித்த உலக தமிழினம் போற்றும் தாய். தமிழீழ போராளிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தன் வீட்டில் வைத்து பாதுகாத்து, சோறு போட்டு பாசத்தை பொழிந்த புன்னகையரசி. 

போலீசார் தன் வீட்டிலிருந்த தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் படத்தை அகற்ற முயன்ற போது அந்த படத்தை அகற்றாதீர்கள். அதுவும் என் மகன் தான் என வீரத்தோடு போர்ப்பணி செய்த வீர மங்கை. 

விடுதலை புலிகள் கலிங்கப்பட்டி வீட்டில் தங்கி இருந்த காலங்களில் இரண்டு கை இரண்டு கால்கள் இல்லாதவர்களை கூட மருந்திட்டு காப்பாற்றி வாழவைத்து வழியனுப்பி வைத்த வீரத்தாய்.

தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும் மதுவிற்கு அடிமையாகிவிட கூடாது என மதுவிற்கெதிராக தனி ஆளாய் களத்தில் இறங்கி பெரும் போராட்டம் நடத்திய போர்ப்படை தலைவி. 

தமிழீழ மக்களுக்காகவும், தாய் தமிழக மக்களுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர். தன் மகன் சிறையில் வாடியபோது கலங்காதே மகனே! நீ கொலையா செய்துவிட்டாய்! உன்னை எத்தனை நாள்தான் சிறையில் அடைத்து வைக்க முடியும் என்று ஆறுதல் சொன்ன தாய். 

தன் மகன் சிறை சென்றால் மனவருத்தபடும் தாய்க்குலங்களுக்கு மத்தியில், மகிழ்ச்சியடையும் புதுமைப்பெண். சிறை வாசத்தின் கொடுமைக்காக அல்ல. தன் மகன் அப்படியாவது கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டுமே என்றெண்ணிய தாயுள்ளம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மகனை பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி, வளர்த்து, படிக்க வைத்து, பட்டங்கள் பல வாங்க செய்து, தமிழ் மக்களை காப்பதற்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக, தமிழினம் தழைக்க போரிடுவதற்காக, தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைக்க போர்ப்படையை தயார் செய்ய, தமிழ் மக்களுக்காகவே சேவையாற்ற தன் மகன் வைகோவை அற்ப்பணம் செய்த அந்த வீரமிக்க தாயார் மாரியம்மாள் அவர்கள் நேசித்த தமிழீழத்தை வென்றெடுக்கவும், முழு மதுவிலக்கு அமல்படுத்தும் வரை போராடி வெற்றி பெறவும், தமிழின முதல்வர் வைகோ அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கிடைக்கவும், அன்னை மரியம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்

No comments:

Post a Comment