Saturday, January 31, 2015

பாரத தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

பாரத திருநாட்டின் தேசிய கொடி ஏற்றும்போது, தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம். 

ஆனால் அதற்குள் ஒளிந்துள்ள உண்மை பாரத மக்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நம் பாரத தேசம் சுதந்திரம் பெறுவதற்கும் பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்கவும் நடந்த போர்களில் எண்ணற்ற வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீரர்கள் வீரச்சாவை அரவணைக்கும்போது, அவர்களின் மனைவியின் கூந்தலில் இருக்கும் மலர்கள் கீழே உதிர்கின்றன. நம் பாரதத்தின் தேசிய கொடி மேலே ஏறும் போது அதிலிருந்து மலர்கள் கீழே விழுந்து அதனையே ஞாபகப்படுத்துகின்றது. 

நம் தேசிய கொடி பட்டொளி வீசி பறக்கவும் நாட்டு மக்களின் சுக போக வாழ்விற்காகவும் எங்கோ ஒரு மூலையில் தினமும் எல்லையில் நம் வீரர்கள் தங்களின் இன்னுயிரை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களின் மனைவிகளின் கூந்தலில் இருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்து தேசத்திற்காக இன்னுயிர் கொடுக்கும் தியாக தீபங்களை நினைவு கூருவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Tuesday, January 27, 2015

சிறை குற்றவாளியை முன்னிறுத்தும் தமிழக அரசை அதிகார இறக்கம் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்த குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் தமிழக அரசு துறை சார்பாக தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இதில், காவல்துறை உள்பட 25 துறைகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இந்த வாகனங்களின் அனைத்திலும், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றிருந்தது. இது மட்டுமல்ல, தற்போதைய முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் படம் ஒரு இடத்திலும் சிறிய வடிவில் கூட இடம்பெறவில்லை. இது அதிமுக அரசின் சர்வாதிகார அராஜக போக்கை காட்டுகிறது. இதை செயல்படுத்திய அதிமுக அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, தற்பொழுது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார். அவரின் படத்தை அரசின் பொது நிகழ்ச்சிகளில் உபயோகிப்பது அரசியல் சட்டத்திற்கே புறம்பான செயலாகும். இது அவமானகரமானது மட்டுமல்ல, இந்தியாவுக்கே இழுக்குமாகும். இந்த போக்கையே தமிழக அரசு கடைபிடித்தால், தமிழக அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்திலிருந்து அதிமுக அரசை கீழிறக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் உடனே ஜனநாயக  வழியில் தேர்தலை நடத்தி புதிய அரசை அமைக்கவும் மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு கண்டனம்!

இந்தியப் பேரரசின் 66-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் நேற்று நடைபெற்றன. 

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" பாராட்டும் நாடு இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரங்களை சிறப்புகளை வெளிப்படுத்துகிற அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மொத்தமே 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த ஆண்டு 2வது பரிசும் கூட கிடைத்திருந்தது குறிப்பிடதக்கது.

உலகமே கண்டுகளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது பாதிக்கும் மேலான மாநிலங்களின் பங்கேற்பின்றி நிகழ்ந்திருப்பது இந்திய கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானது. இந்தியப் பேரரசின் இப்போக்கு கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனுமதி மறுக்கப்பட்ட மாநிலங்களில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.. வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்ற பிரிவினை எண்ணத்தைத்தான் விதைக்கும். அதுவும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஒடிஷா என பல மாநிலங்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்படியானால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்தான் இந்த நாட்டின் ஒரு அங்கமா? என்ற கேள்வியையும் மத்திய அரசின் நடவடிக்கையால் எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களுமே இந்தியக் கூட்டாட்சியின் ஒரு அங்கம் என்ற எண்ணத்துடன்தான் மத்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசானது இத்தகைய போக்குகளைக் கைவிட்டு அனைத்து மாநிலங்களையும் இந்திய தேசத்தின் ஒரு அங்கமாக கருதி மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Monday, January 26, 2015

இந்திய குடியரசு தின நல் வாழ்த்துக்கள் 2015

இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.இந்தியாவின் முக்கிய தேசிய விடுமுறை நாட்களில் இதுவும் ஒன்று.

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948 இல் சுதந்திரம் பெற்ற பின் 26 சனவரி நாளை குடியரசுத் தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது. இந்த தினத்தையே பாரத மக்கள் அனைவரும் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, January 25, 2015

அடுத்த நாட்டு அதிபருக்கு கொடுக்கும் பாதுகாப்பு, சொந்த நாட்டு மக்களுக்கும் கொடுக்கபடவேண்டும்.

இந்தியவின் குடியரசு தின விழாவிற்கு பங்கேற்க வந்திருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கவிருக்கும் ஐடிசி மௌரியா ஓட்டலின் பாதுகாப்பு முழுவதையும், அமெரிக்க ரகசிய புலனாய்வுப் படை ஏற்றுள்ளது. அந்த ஓட்டலில், அதிநவீன கட்டுப்பாட்டு அறையையும் அமெரிக்க அதிகாரிகள் அமைத்துள்ளனர். மேலும், தில்லியில் கண்காணிப்புப் பணிக்காக நிறுவப்பட்டுள்ள சுமார் 15,000 சிசிடிவி காமிராக்களை கண்காணிக்கும் குழுவில் அமெரிக்க அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தில்லியில் பாதுகாப்புப் பணியில், மாநில போலீஸார் 80,000 பேருடன், துணை ராணுவப் படை வீரர்கள், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில போலீஸார், இந்திய ரிசர்வ் படை போலீஸார் என சுமார் 20,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தும் முயற்சி நடைபெற்றால், அதை முறியடிக்கும் வகையில் முக்கியப் பகுதிகளில் "விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்' நிறுவப்பட்டுள்ளன. நெடுந்தூரம் துப்பாக்கியால் சுடக்கூடிய "ஸ்நைப்பர்ஸ்' வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானப்படை விமானங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் நாடு திரும்பும் வரை அவரின் பாதுகாப்பிற்காக பல கோடி பணம் இந்திய அரசு செலவிடுகிறது. இவரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ள 15000 காமிராக்கள் நிரந்தரமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அகற்றபடாமல் இருக்க வேண்டும். தலைநகரிலே பெண்களின் பாதுகாப்பின்மை, கொலை சம்பவங்கள், ஆள் கடத்தலை தடுக்க இது வழிவகை செய்யும். எனவே இந்திய அரசானது சொந்த மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை, வரும் நிதியாண்டில் தனியாக நிதியை ஒதுக்க முன்வர வேண்டும். நிதியை ஒதுக்கி, அதை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்து 24 மணி நேரமும் கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய அரசை கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.
வழக்கத்தில், இதை நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்சினை அல்ல. இது உணவுக் குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. நடு நெஞ்சில் தொடங்கித் தொண்டைவரை எரிச்சல் பரவும். மருத்துவ மொழியில் இதற்கு 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro-Esophageal Reflex Disease) சுருக்கமாக (GERD) என்று பெயர்.

காரணம் என்ன?
வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்டச் செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக்குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு (Mucus membrane) உள்ளது. இது, உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக் குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன, மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது, அது மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடுபோல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல 'தொளதொள'வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.
வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.
சிலருக்கு இரைப்பையிலிருந்து ஒரு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus Hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக, உணவுக் குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம், உணவு, வாயு எல்லாமே உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும்.
பலருக்கு உணவைச் சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

தூண்டும் காரணிகள்
அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

என்ன முதலுதவி?
நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர் சாப்பிடலாம். புளிப்பில்லாத மோர் குடிக்கலாம். நுங்கு சாப்பிடலாம். ஜெலுசில், டைஜீன் போன்ற அமிலக் குறைப்பு மருந்துகளில் ஒன்றை 15 மி.லி. அளவில் குடிக்கலாம். இவை எதுவும் கிடைக்காத நேரத்தில், குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட நெஞ்செரிச்சல் குறையும்.

அலட்சியம் வேண்டாம்!
அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். இதற்கு இரண்டு காரணங்கள்: சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி / இசிஜி பரிசோதனையைச் செய்துகொண்டால் இந்தக் குழப்பம் தீரும். அடுத்து, நீண்ட நாள் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில் குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும்.
இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ (Barrett’s Esophagus) என்று பெயர். இது ஏற்படும்போது 100-ல் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதற்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சை செய்யமுடியும்.

தடுப்பது எப்படி?
நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெயில் பொரித்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பு ஏறிய உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். தக்காளி சாஸ், ஆரஞ்சு, எலுமிச்சை, காபி, டீ, சாக்லேட், மென்பானம், நூடுல்ஸ், புரோட்டா, வாயு நிரப்பப்பட்ட பானம் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு, ஏப்பம் வரும். சமயங்களில், ஏப்பத்துடன் 'அமிலக் கவளம்' உணவுக் குழாய்க்குள் உந்தப்படும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
வழக்கமாக, உணவைச் சாப்பிட்டதும் இரைப்பை விரியும். அப்போது இரைப்பையின்மேல் அழுத்தம் ஏற்பட்டால், உணவுக் குழாய்க்குள் அமிலம் செல்லும். இதைத் தடுக்க, இறுக்கமாக அணியப்பட்ட ஆடைகள், பெல்ட் ஆகியவற்றைச் சிறிது தளர்த்திக்கொள்ள வேண்டும். உணவைச் சாப்பிட்டபின் குனிந்து வேலை செய்யக்கூடாது; கனமான பொருளைத் தூக்கக்கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது.

முக்கிய யோசனைகள்
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது, இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கிவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே சில மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலது புறமாகப் படுப்பதைவிட, இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
மது அருந்துவது, புகைபிடிப்பது, புகையிலை/பான்மசாலா போடுவது இந்த மூன்றும் நெஞ்செரிச்சலுக்கு முக்கிய எதிரிகள். புகையில் உள்ள நிக்கோடின், இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால், நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். இந்த எதிரிகளை உடனே ஓரங்கட்டுங்கள். உடல் எடையைப் பராமரியுங்கள். அப்புறம் பாருங்கள், நெஞ்செரிச்சல் உங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுக்கொள்ளும்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Sunday, January 18, 2015

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் - நாள் 18-01-2015

தமிழகம் முழுவதும் 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 43 ஆயிரம்  போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு  மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இதற்காக 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 18-01-2015 அன்று ஞாயிற்றுகிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும்.  அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் முதல் தவணையாக  ஞாயிற்றுகிழமையும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 22ம் தேதியும் சொட்டு மருந்து  கொடுக்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு  மருந்து கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும்  குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். 

இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பயணம் மேற்கொள்ளும் மற்றும்  தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான  நிலையங்களில் 1,652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

எனவே தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்போம், ஊனமில்லாத தேசத்தை உருவாக்குவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Saturday, January 17, 2015

ஜல்லிக்கட்டு மேலை கலாச்சாரமா? திருமதி.மேனகா காந்தி-க்கு கண்டனம்...

பல நூற்றாண்டுகளாக ஜல்லிகட்டை வீர விளையாட்டாக தமிழர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறோம். இது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாகும். இதை கொச்சை படுத்துவது போல ஜல்லிகட்டு மேலை நாட்டு விளையட்டு என்றும், உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரி என்றும் கூறியுள்ளார் திருமதி மேனகா காந்தி. தமிழர்கள் தடையை நீக்க போராடுகின்ற நிலையில் மத்திய அமைச்சரே, இப்படி பேசியிருப்பது தமிழரின் நெஞ்சில் ஈட்டியை பாய்த்தது போல உள்ளது. அவர் இப்படி பேசியதற்கு நான் வன்மையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் பேசியதை திரும்ப பெறவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். 

பாஜக வின் அமைச்சர் இப்படி பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார். யார் பேசினாலும் தனிப்பட்ட கருத்து என்று கூறும் திருமதி தமிழிசை, பிரதமர் கூறுவதும் தனிப்பட்ட கருத்து என்று கூறுவாரா? எனவே, இது போன்ற நாடக வேலைகளில் தமிழக பாஜக மீண்டும் ஈடுபடவேண்டாம் எனவும் கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Friday, January 16, 2015

மாட்டுப் பொங்கல் திருநாள்...

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் புதியது போல சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். இதே நாளில்தான் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டும் நடைபெறும்.
இவ்வாறாக தமிழரின் பண்பாட்டு நாகரீகம் காக்க படுகிறது. இதை அனைவரும் மனதிலே ஏற்றுகொண்டு அனைத்து வருடமும் கொண்டாடி மகிழ வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Thursday, January 15, 2015

ஜான் பென்னி குக் என்பவர் யார்? எதற்காக முல்லை பெரியார்-ஐ கட்டினார்?

ஜான் பென்னி குக் என்பவர் எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.

அப்பொழுது தான் அவர் கண்களில்  முல்லைப்பெரியார் நதிபட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து  களத்தில் இறங்கினார் பென்னி குக். ஏற்கனவே ராமநாதபுரம் ராஜா தன்னுடைய தளபதி முத்து அருளப்ப பிள்ளையிடம் கேட்டு முடியாது என்று ஒதுக்கப்பட்ட யோசனை அது.

பென்னிகுக் மனம் தளராமல் திட்டம் தீட்டினார். ஜான் ரைவ் என்கிற பொறியியல் வல்லுனருடன் விவாதித்தார். அறுபத்தி இரண்டு லட்சம் அணை கட்ட செலவாகும் என்று அறிக்கை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் கொடுத்தார்.

"இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தப்பகுதி முழுக்க செழிப்படையும் ; திட்டம் நிறைவேறினால் உலகத்திலேயே மிக அழகான மகிழ்ச்சி தரும் சுற்றுலா மையமாக இது மாறும் சாத்தியமும் உள்ளது. இதுவே என் கனவு !" என்று அறிக்கையில் குறிக்கிற அளவுக்கு அவர் மனதெல்லாம் இந்த திட்டம் பொங்கிக்கொண்டு இருந்தது. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்; வரி வசூல் செய்யலாம் அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு.

பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்து பாதி பணிகள் முடிந்த பொழுது  காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது.

கப்பலேறி ஊருக்கு போனார். இருக்கிற சொத்துக்களை எல்லாமும் விற்றார். மனைவியின் நகைகள், வீடு எல்லாமும் விற்கப்பட்டது. எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். தொன்னூறு அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டிப்போட்டு ரோப்வேக்களை அமைத்தார். பல நூறு பேரின் இறப்பு, காலரா, மலேரியா என்று எத்தனையோ சிக்கல்கள் துரத்திய பொழுதும் மனம்தளராமல் செயல்பட்டார் அவர்.  அவ்வப்பொழுது சாதி ஒழிப்பை வலியுறுத்தி கலப்பு திருமணங்களும் செய்து வைத்தார். எட்டு வருட உழைப்பில் உருவானது முல்லை பெரியாறு அணை.  பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் - அவரே சொல்கிற வரிகள் இவை...

"இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை; எனக்கு செய்ய கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது!"என்றார்.

2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய அவருக்கு சிலை வைத்து தெய்வமாகவே வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ பிள்ளைகள் இங்கிலாந்தில் பிறந்த அவரின் பெயர் தாங்கி அப்பகுதிகளில் வளர்கிறார்கள். அறுபத்தைந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவை தீர்த்த வள்ளல் அல்லவா அவர் ? அப்படிபட்ட மாமனிதனின் பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்த தினத்தை அப்பகுதி மக்கள் சிலை வைத்து கொண்டாடி மகிழுகிறார்கள். அவர்களோடு நாமும் இணைந்து அனைத்து தமிழர்களும் பொங்கல் பண்டிகையோடு சேர்த்து கொண்டாட வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்...

தமிழ் நாள் காட்டியில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழர்கள் அனைவருமே புதுப்பானைகளை வாங்குவர். வசதிபடைத்த பலர் புத்தாடைகளையும் வாங்கி உடுத்தி மகிழ்வர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தை முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.

எனவே தமிழர்களாகிய நாம் அனைவருமே பொங்கல் தினத்தில் புன்னகையோடு இனைப்பை அனைவருக்கும் பரிமாறி அன்பை அனைவரிடத்திலும் ஓங்க செய்ய வேண்டும். தமிழரின் திருநாளிலே அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தி மக்களை சுறுசுறுப்பாக்குவதோடு அனைத்து மக்களுமே ஒருவருக்கொருவர் கலந்துரையாட வாய்ப்பாகவும் அமையும். இந்த தினத்திலே அனைவருமே அன்பை வளர்க்கவும் உறுதி ஏற்போம். சூரிய திசையை நோக்கி பொங்கலிடும் நாம் அனைவருமே ஆனந்தத்தில் பொங்குவோம். அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

மறுமலர்ச்சி மைக்கேல்...

Wednesday, January 14, 2015

போகி பண்டிகை..

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். இந்த தினத்தை கொண்டாடும் நாம், வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்கி மகிழ்ச்சியாக கடைபிடிக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
 
மறுமலர்ச்சி மைக்கேல்...

Monday, January 12, 2015

கொடுப்பைக்குழி வட்டார மக்களின் ஒரே கிளப், ஒற்றுமை ஓங்கவே....

கொடுப்பைக்குழி வட்டார பொதுமக்கள் சார்பாக ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் இயங்கி வருகிறது. இதில் இளம் விளையாட்டு வீரர்கள், ஆலோசகர்கள் மற்றும் சக உறுப்பினர்கள் என ஏறக்குறைய 300 பேர் உள்ளனர். இந்த கிளப்-ல் மட்டைப்பந்து பிரதானமாக  விளையாட்டாக இருந்தாலும், கபடி, சிலம்பாட்டம், மற்றும் நாட்டுபுற, உடல் ஆரோக்கியத்திற்கான அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் ஊக்கமளித்து திறமையானவர்களை உருவாக்கி வருகிறது. 

இந்த கிளப்-ஆனது விளையாட்டுகளை மட்டும் ஊக்குவிக்காமல், உடல் சார்ந்த, பொது நலன் சார்ந்த அனைத்து சேவைகளிலும் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள், கலாச்சார மேடைகள், பள்ளிகளின் சுற்றுபுறத்தை தூய்மை படுத்துதல், பொதுமக்களுக்காக போராடுதல், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை செயற்படுத்துதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள அனைவருமே கொடுப்பைகுழி வட்டார பகுதியை சார்ந்த திறமை மிக்க வருங்கால தூண்கள். 

இந்த கிளப்-ஆனது கொடுப்பைகுழி வட்டார மக்களை கொண்டு இயங்குவதால் மேலும் கிளப் தொடங்கினால், கொடுப்பைக்குழி வட்டார மக்களை கூறுபோடுவது போல வெளி மக்களுக்கு தென்படும். எனவே அனைத்து மக்களும் எந்த வித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து, சில குறைகள் இருந்தால், குழுவாக கூடி ஆராய்ந்து, பொதுமக்கள் குறைகளை எடுத்து சொல்லி, நிவர்த்தி செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் நமது கொடுப்பைகுழி வட்டாரத்தை முன்மாதிரியாக மாற்ற கை கோர்ப்போம்.

வெற்றி நமதே...

மறுமலர்ச்சி மைக்கேல்...

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை- க்கு இடையே பாலம், மத்திய அமைச்சருக்கு நன்றி

திருவள்ளுவர் திருப்பயண தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் தமிழக அரசு அனுமதி வழங்கினால், குமரிக்கண்டத்தில் உள்ள கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை-க்கும், அதன் அருகில் அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே பாலம் அமைத்து கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் இதற்கான நிதியும் தயாராக உள்ளதாகவும் அனைத்து செலவையும் மத்திய அரசே ஏற்றுகொள்ளும் என அறிவித்துள்ளது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அலைகளின் சீற்றத்தால் சில சமயங்களில் ஐய்யன் வள்ளுவர் சிலையை காண முடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் இவற்றை கண்டுகளிப்பதோடு அரசுக்கும் இதனால் வருமானம் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த நல்ல திட்டத்திற்கு தமிழக அரசு முட்டுகட்டை போடாமல் உடனே அனுமதி வழங்க வேண்டும். அனுமதி கிடைத்தவுடனே குமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் திரு பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் காலம் தாழ்த்தாது பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கொள்வதோடு இந்த உன்னதமான திட்டத்தை அறிவித்ததற்காக பொதுமக்களின் சார்பாக நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

Saturday, January 10, 2015

ஈழத்தமிழர் படுகொலை உக்கிரமாக தொடருமோ?

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன், மைத்திரி பால சிறிசேனா தேர்தல் களத்தில் நின்றார். தமிழர்களும் பெரிய தீமையான ராஜபக்சா க்கு வாக்குகளை செலுத்தாமல், சிறிய தீமையான மைத்திரி பால சிறிசேனா க்கு வாக்களித்து அதிபராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். இப்போதைய அதிபரே தமிழீழ இனப்படுகொலை 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடந்த போது இராணுவ அமைச்சராக இருந்து ராஜபக்ஷ வின் கட்டளையால் இராணுவத்துக்கு அதிகாரத்தை கொடுத்து இன அழிப்பை செய்தார். அப்போது இராணுவ தளபதியாக பொன்சேகா இருந்தார். இப்போது அந்த தளபதியையே இராணுவ செயலாளராக நியமித்துள்ளார் இப்போதைய அதிபரும், இராணுவ அமைச்சக மந்திரியுமான மைத்திரி.

எனவே இப்போதே அவர்கள் திட்டமிட்டு தமிழருக்கெதிராக மீண்டும் இனப்படுகொலைகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளார்களோ என்ற அச்சம் தமிழர்களிடயே எழுந்துள்ளது. எனவே மீண்டும் மைத்திரியும், பொன்சேகாவும் இணைந்துள்ள நிலையில் அந்த காட்டுமிராண்டி செயலை செய்ய துணியாமல் தமிழர்களுக்கு சுய உரிமையை வழங்க வேண்டும்.

தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்திரி இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் தமிழர்களின் காணிகளை திரும்ப ஒப்படைத்து, இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றி தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழி வகை செய்து தமிழர்களுக்கு கைமாறு செய்யவேண்டும்.

மறுமலர்ச்சி மைக்கேல்...