Tuesday, January 27, 2015

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு கண்டனம்!

இந்தியப் பேரரசின் 66-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் நேற்று நடைபெற்றன. 

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" பாராட்டும் நாடு இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களின் கலாசாரங்களை சிறப்புகளை வெளிப்படுத்துகிற அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மொத்தமே 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 13 மாநிலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு அரசின் அலங்கார ஊர்திக்கு கடந்த ஆண்டு 2வது பரிசும் கூட கிடைத்திருந்தது குறிப்பிடதக்கது.

உலகமே கண்டுகளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வானது பாதிக்கும் மேலான மாநிலங்களின் பங்கேற்பின்றி நிகழ்ந்திருப்பது இந்திய கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானது. இந்தியப் பேரரசின் இப்போக்கு கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அனுமதி மறுக்கப்பட்ட மாநிலங்களில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்.. வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்ற பிரிவினை எண்ணத்தைத்தான் விதைக்கும். அதுவும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, பீகார், ஒடிஷா என பல மாநிலங்கள் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

அப்படியானால் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள்தான் இந்த நாட்டின் ஒரு அங்கமா? என்ற கேள்வியையும் மத்திய அரசின் நடவடிக்கையால் எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களுமே இந்தியக் கூட்டாட்சியின் ஒரு அங்கம் என்ற எண்ணத்துடன்தான் மத்திய அரசு செயல்பட வேண்டுமே தவிர இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசானது இத்தகைய போக்குகளைக் கைவிட்டு அனைத்து மாநிலங்களையும் இந்திய தேசத்தின் ஒரு அங்கமாக கருதி மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment