Friday, November 11, 2016

நட்பின் மழலைக்கு பிறந்த நாள் வாழ்த்து!

நட்பின் மழலைக்கு பிறந்த நாள் வாழ்த்து!

உன் மழலை மொழி கேட்டு பதிலளிக்க ஆசைதான்.
உன் சிரிப்பில் கடலளவு சிரிக்க ஆசைதான்.
உன் நடை கண்டு வியப்புற ஆசைதான்.
உன் விரல் பிடித்து ஊர் சுற்றவும் ஆசைதான்.
மனதில் மாணிக்கமாக நீ இருக்கிறாய்.
வளர்ந்து சுற்றம் போற்ற நட்பை நிலை நாட்டு.
நட்பிற்கு புதிய இலக்கணம் உருவாக்கு,
பள்ளி தொடங்கி கல்லூரி காலங்களில்,
நட்பின் வசந்தத்தினை நீ உணர்வாய்.
உன் பார்வை சினேகிதர்கள் மேல் பரவட்டும்.
சிறு குறு பருவம் முதலே பாசம் கொள்.
பாசங்களை உன் பெற்றோரிடத்திலும் புகுத்து.
நான் பார்த்த நேரத்தில் போர்வைக்குள் நீ இருந்தாய்!
இன்றைய கபடம் அறியா உன் படம் பார்த்து,
எனையறியாமல் என் விரல்கள் எழுத்தாணியாகிறது.
ஊர் போற்றி, வையகம் உனை போற்ற படித்திடு,
அரிதாக கிடைப்பதுதான் முக்கியமானதாகிறது,
எளிதாக கிடைப்பதையும் எட்டி பிடித்துக்கொள்.
பட்டங்கள் பல பெற பல நூறு நூல்கள் உண்டு.
நட்பிற்கு சுரண்ட தெரியா நண்பர்கள் தான் உண்டு.
உன் பெற்றோர் சொல் கேட்டு உலகறிந்திடு,
வாலிப நாட்களில் கடினத்தை உணராமல்,
நான் இல்லாவிட்டால் வேறு யார் என்ற எண்ணம் கொள்.
இதயங்கள் நிலை மாறி இடம்பெயர துடிக்கலாம்,
கட்டுப்பாடு என்ற வளையத்தில் அதை அடைத்திடு!
பட்டங்கள் பல பெற்று ஈன்றவரை பெருமை படுத்து,
நானிலம் போற்ற காலங்களை செம்மை படுத்து.
உன்னில் தவம் செய்து உழைப்பில் முன்னேறு.
பார் போற்றும் பாரியாய் பறை சாற்று.
இன்றைய என் வார்த்தைகள் உனக்கு புரிவதில்லை,
உன் தந்தை உனக்கு இதை படித்து காட்டினாலும்,
அர்த்தங்கள் உனக்கு புரியும் வயதில்லை,
நண்பர்கள் வட்டமாய் உருவாகும் காலம் வரும்.
அந்நேரம் இந்த வாழ்த்துரை ஒருவேளை உன் கண்ணில் படலாம்,
உன் தந்தையிடம் இது யார் என்று கூட கேட்கலாம்.
என் வார்த்தைகள் ஒருவேளை உணர்ச்சியூட்டலாம்,
நல்லதை மட்டும் எடுத்துக்கொள், கெட்டதை வீசிடு.
உன் வாழ்விலும் அதையே கடைபிடிக்கலாம்.
புகழ் பல பெற்று வாழ்வாங்கு வாழ,
அன்பு கலந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மைக்கேல் செல்வ குமார்

11-11-2016 / ஓமன்

No comments:

Post a Comment