Friday, December 19, 2014

பி.பி.சி தமிழ்ச் சேவையை இந்தியுடன் இணைத்து டெல்லிக்கு மாற்றக்கூடாது


அனைத்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஈழம் குறித்த செய்திகளையும், தமிழ் இனம் பற்றிய செய்திகளையும் இலண்டனில் இருந்து இயங்கிய பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பின் மூலம் தெரிவித்து வந்தது. குறிப்பாக 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் தமிழ் ஈழ மக்கள் படும் அவலத்தையும் கொடுந்துயரத்தையும் ஓரளவாவது பி.பி.சி. தமிழோசை அறிவித்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பி.பி.சி. தமிழோசையை இந்தி மொழியுடன் இணைத்து இலண்டன் தலைமையகத்திலிருந்து மாற்றி புது டில்லியில் இருந்து ஒலிபரப்ப முடிவு செய்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது. எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினுடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. 

பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு

 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 இலட்சம் நேயர்கள் உள்ளனர். முக்கியமாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.

டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். மேலும் பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியா-இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த நிகழ்ச்சிகளும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும்.

பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயமும் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எடுத்துக்காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப்பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து, இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதோடு, முதல்வர் அவர்கள் தமிழர்களின் எதிகாலம், தமிழினம், தமிழ் மொழி ஆகியவற்றை கருத்தில் கொண்டு BBC அலுவலகத்தை தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளை வெளிபடுத்தி இப்போது இயங்கும் இடத்திலே தொடர்ந்தும் இயங்கும்படி செய்ய தூரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுகொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்...

No comments:

Post a Comment